Monday, July 19, 2010

ஜேசன் மிராயஸ் - தெள்ளிய இசை


மனித வாசம் படாத காட்டினுள்ளே தனியே நடந்து செல்லும் போது மௌனமான அந்த அமைதிக்குள் சில்வண்டுகளும் சிறு குருவிகளும் எமக்குப் பாடிக் காட்டும் இயற்கையின் கீதங்களைச் செவிமடுத்திருக்கிறீர்களா? அறுவடை முடிந்த விளைநிலங்களில் வளர்ந்திருக்கும் நாயுண்ணிப் பற்றைகளும் காவிளைப் பற்றைகளும் காற்றில் சிலுசிலுக்கும் போது வரும் ஓசையை நின்று கேட்டிருக்கிறீர்களா? பனைகளும் வடலிகளும் நிறைந்த காணிகளுக்குள்ளால் புகுந்து செல்லும் போது அந்த ஓலைகள் சரசரக்கும் போது அவை என்ன சொல்ல நினைக்கின்றன என்று யோசித்திருக்கிறீர்களா?, இழந்து விட்ட இளமைப் பருவத்தின் நினைவுகளில் உறைந்து போய் இருக்கும் நம் புழுதி படிந்த இயற்கையுடனான உறவின் எச்சங்களை நினைத்துப் பார்ப்பீர்களா? 
நகரத்தின் நெரிசல் மிக்க இயந்திர வாழ்க்கையின் அவசரத்தில் இதைப் பற்றி யோசிக்கக் கூட உங்களுக்கு இப்போது நேரமில்லாமல் இருக்கலாம். ஜேசன் மிராயஸ்(Jason Mraz) என்ற இந்தக் கலைஞன், விட்டுப் போன வாழ்க்கையின் இயல்பான தருணங்களை இயற்கையின் குரலில் மீட்டும் போது தவற விட்ட எமது கணங்களை எமக்குச் சுட்டிக் காட்டுவது போல் உணர முடிகிறது.


Friday, July 16, 2010

அக்டோபஸ் - எண்காலி


உலகிலுள்ள முதுகெலும்பில்லாத உயிரினங்களிலேயே மிகவும் புத்திசாலியான சுவாரசியம் மிக்க அக்டோபஸ் பற்றி சில அறிந்திராத செய்திகளைப் பார்ப்போமா?

அக்டோபஸ் என்ற பெயரின் நேரடி அர்த்தம் எண்காலி என்றாகிறது. கணவாய்க்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது, ஆனால் தமிழில் என்ன பெயர் என்று தெரியவில்லை, எண்காலி என்று மொழி பெயர்க்கலாம் என்று நினைக்கிறேன். சமீபத்தில் போல் என்ற பேருடைய ஒரு எண்காலி உலகக் கோப்பை முடிவுகளை முன்கூட்டியே எதிர்வு கூறிப் பிரபலமானது எல்லோருக்கும் தெரிந்திருக்கும், இந்தப் பதிவு அதைப் பற்றி அல்ல என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.

எண்காலிகள் பற்றிய முதல் சுவாரசியமான செய்தி, ஹவாய் தீவு மக்களின் பூமியின் மறு உருவாக்கம் பற்றிய கதைகளின் படி, அழிந்து போன முந்தைய உலகத்தின் ஒரே ஒரு மீதி, அதாவது இந்த உலகத்துக்கு சொந்தமில்லாத வேறு உலகத்தைச் சேர்ந்த உயிரினம் இந்த எண்காலி தான். வேற்றுக் கிரக வாசிகளின் படங்களிலும் நீங்கள் பார்த்திருக்கலாம், சில உயிரினங்கள், இந்த எண்காலி போல வடிவமைத்து இருப்பார்கள். ஏன் என்றால் அவற்றின் உருவம், பெரிய தலையும் கால்களும் மட்டும் கொண்டதாக, அதிக அறிவுத் திறனும் நிறைய வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடியதுமான தோற்றம் எண்காலிக்கு மட்டுமே இருப்பதால் தான்.


Friday, June 25, 2010

பொன்வானம் பன்னீர் தூவுது


இளையராஜாவின் இசையில், ஜானகியின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் கேட்கும் போது தேவ கானமோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு உள்ளத்தை ஊடுருவிச் சென்று   மனதை வருடும் தன்மையது.  தூறலாய் ஆரம்பிக்கும் இசை மெல்ல மெல்ல மனதை தூவானமாய் நனைத்து, அடை மழை போல் வேகமெடுத்து வந்ததும், பாடல் வரிகள் மீண்டும் தூவானமாய் எம் மனதில் விசிறும் ஒரு அற்புதமான அனுபவத்தை உருவாக்கும் பாடல் இது. இன்று நீ நாளை நான் என்ற படத்தில் சிவகுமாரும் லஷ்மியும் தோன்றும் பாடல் காட்சி கீழே.


Related Posts with Thumbnails