Monday, July 19, 2010

ஜேசன் மிராயஸ் - தெள்ளிய இசை


மனித வாசம் படாத காட்டினுள்ளே தனியே நடந்து செல்லும் போது மௌனமான அந்த அமைதிக்குள் சில்வண்டுகளும் சிறு குருவிகளும் எமக்குப் பாடிக் காட்டும் இயற்கையின் கீதங்களைச் செவிமடுத்திருக்கிறீர்களா? அறுவடை முடிந்த விளைநிலங்களில் வளர்ந்திருக்கும் நாயுண்ணிப் பற்றைகளும் காவிளைப் பற்றைகளும் காற்றில் சிலுசிலுக்கும் போது வரும் ஓசையை நின்று கேட்டிருக்கிறீர்களா? பனைகளும் வடலிகளும் நிறைந்த காணிகளுக்குள்ளால் புகுந்து செல்லும் போது அந்த ஓலைகள் சரசரக்கும் போது அவை என்ன சொல்ல நினைக்கின்றன என்று யோசித்திருக்கிறீர்களா?, இழந்து விட்ட இளமைப் பருவத்தின் நினைவுகளில் உறைந்து போய் இருக்கும் நம் புழுதி படிந்த இயற்கையுடனான உறவின் எச்சங்களை நினைத்துப் பார்ப்பீர்களா? 
நகரத்தின் நெரிசல் மிக்க இயந்திர வாழ்க்கையின் அவசரத்தில் இதைப் பற்றி யோசிக்கக் கூட உங்களுக்கு இப்போது நேரமில்லாமல் இருக்கலாம். ஜேசன் மிராயஸ்(Jason Mraz) என்ற இந்தக் கலைஞன், விட்டுப் போன வாழ்க்கையின் இயல்பான தருணங்களை இயற்கையின் குரலில் மீட்டும் போது தவற விட்ட எமது கணங்களை எமக்குச் சுட்டிக் காட்டுவது போல் உணர முடிகிறது.


Friday, July 16, 2010

அக்டோபஸ் - எண்காலி


உலகிலுள்ள முதுகெலும்பில்லாத உயிரினங்களிலேயே மிகவும் புத்திசாலியான சுவாரசியம் மிக்க அக்டோபஸ் பற்றி சில அறிந்திராத செய்திகளைப் பார்ப்போமா?

அக்டோபஸ் என்ற பெயரின் நேரடி அர்த்தம் எண்காலி என்றாகிறது. கணவாய்க்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது, ஆனால் தமிழில் என்ன பெயர் என்று தெரியவில்லை, எண்காலி என்று மொழி பெயர்க்கலாம் என்று நினைக்கிறேன். சமீபத்தில் போல் என்ற பேருடைய ஒரு எண்காலி உலகக் கோப்பை முடிவுகளை முன்கூட்டியே எதிர்வு கூறிப் பிரபலமானது எல்லோருக்கும் தெரிந்திருக்கும், இந்தப் பதிவு அதைப் பற்றி அல்ல என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.

எண்காலிகள் பற்றிய முதல் சுவாரசியமான செய்தி, ஹவாய் தீவு மக்களின் பூமியின் மறு உருவாக்கம் பற்றிய கதைகளின் படி, அழிந்து போன முந்தைய உலகத்தின் ஒரே ஒரு மீதி, அதாவது இந்த உலகத்துக்கு சொந்தமில்லாத வேறு உலகத்தைச் சேர்ந்த உயிரினம் இந்த எண்காலி தான். வேற்றுக் கிரக வாசிகளின் படங்களிலும் நீங்கள் பார்த்திருக்கலாம், சில உயிரினங்கள், இந்த எண்காலி போல வடிவமைத்து இருப்பார்கள். ஏன் என்றால் அவற்றின் உருவம், பெரிய தலையும் கால்களும் மட்டும் கொண்டதாக, அதிக அறிவுத் திறனும் நிறைய வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடியதுமான தோற்றம் எண்காலிக்கு மட்டுமே இருப்பதால் தான்.


Friday, June 25, 2010

பொன்வானம் பன்னீர் தூவுது


இளையராஜாவின் இசையில், ஜானகியின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் கேட்கும் போது தேவ கானமோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு உள்ளத்தை ஊடுருவிச் சென்று   மனதை வருடும் தன்மையது.  தூறலாய் ஆரம்பிக்கும் இசை மெல்ல மெல்ல மனதை தூவானமாய் நனைத்து, அடை மழை போல் வேகமெடுத்து வந்ததும், பாடல் வரிகள் மீண்டும் தூவானமாய் எம் மனதில் விசிறும் ஒரு அற்புதமான அனுபவத்தை உருவாக்கும் பாடல் இது. இன்று நீ நாளை நான் என்ற படத்தில் சிவகுமாரும் லஷ்மியும் தோன்றும் பாடல் காட்சி கீழே.


Thursday, June 24, 2010

எண்ணியல் - 1



எண்களுக்கும் இயற்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதைப் போலவே, எண்களுக்கும் எங்களுக்கும் - மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. இது எப்போது துவங்கியது என்று சரியாகத் தெரியாவிட்டாலும், ஆகக் குறைந்தது 30,000 வருடங்களுக்கு முதலே துவங்கி விட்டது என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது.  இந்த ஆதாரங்கள், மனிதன் சந்திரனின் நிலைகளைக் குறித்து வைக்கப் பயன்படுத்தி இருக்கலாம் என நம்பப் படுகிறது. அந்தக் காலத்தில் அவன் வியாபாரம் செய்யத் துவங்கவில்லை போல் இருக்கு.


எண்களைப் பற்றி ஆராய்ந்து எண்களுக்கும் பிரபஞ்சத்திற்கும், இயற்கைக்கும், மனிதர்களுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி அறிவியல் ரீதியாகவோ அல்லது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படாத சோதிட ரீதியாகவோ முடிவுகளை நிறுவும் முறைமையை எண்ணியல் எனலாம் (Numerology). எங்களுக்கு எண்ணியல் என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது பிறந்த திகதி, பெயர் எண் எல்லாம் வைத்து பலன்களைச் சொல்லுதலும், சிலர் அந்த எண்களுக்காக பெயரை மாற்றுவதும் ( ஏன் என்றால் பிறந்த தேதியை மாற்ற முடியாது தானே) தான் ஞாபகம் வரும். பெயர் மாற்றுவதில் பலன் இருக்கோ இல்லையோ அது எங்கள் பிரச்சினை இல்லை. 
எண்களுக்கும் எங்கள் வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளைப் பற்றித் தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.

எண்களில் உள்ள சில அதிசயமான உண்மைகளைப் பார்ப்போமா?





எட்டு எட்டா வாழ்க்கை இருக்கு தெரிஞ்சுக்கோ என்ற பாட்டு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனா ஒரு பையனின் வாழ்க்கையில் எட்டுக்கு ரொம்ப முக்கிய தொடர்பு இருக்கு. எட்டு மாதங்களில் அவனுக்கு பாற்பற்கள் முளைக்கின்றன, எட்டு வயதில் விழுகின்றன. எட்டும் எட்டும் பதினாறு வயதில் அவன் முழுமையாகப் பருவமடைகிறான், எட்டு தரம் எட்டில், அறுபத்து நான்கு வயதில் இனப்பெருக்க காலம் முடிகிறது. அதனால் தான் சீனா நாட்டில், எட்டு என்ற எண் ஆணின் வாழ்க்கையைக் குறிக்கிறது. அதே போல பெண்ணின் வாழ்க்கையைக் குறிக்கும் எண் ஏழு ஆகும். ( மேலே சொன்ன மாதிரி பெண்களுக்கும் சரியா வருதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்)


Friday, June 18, 2010

யாருக்கு சொர்க்கம்? ( 18 + )


சொர்க்கத்தில் சனத்தொகை கூடி இடப் பிரச்சினை ஆகி விட்டது. அதனால், ஒரு நாள் மட்டும் பரீட்சார்த்தமாக ஒரு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. யார் ரொம்ப கஷ்டப்பட்டு மண்டையைப் போடுகிறார்களோ அவர்களை மட்டும் உள்ளே அனுமதிப்பது என்று தலைமைப் பீடம் உத்தரவு போட்டது.

வாசலில் நேர்முகம் ஆரம்பமானது. முதலில் வந்தவரிடம் கேட்கப்பட்டது, 'நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய் ?'
முதலாமவன் சொன்னான் 'அது ரொம்ப மோசமான நாள். என் மனைவியுடன் இன்னொருவனுக்கு தொடர்பு இருக்கு என்று எனக்குத் தெரியும், அன்று அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடிக்க சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்டேன். வீடு முழுவதும் தேடியும் அவனைக் காணவில்லை, எங்கள் வீடு 25 ஆம் மாடியில் இருக்கு, வெளியில் வந்து பால்கனியில் எட்டிப் பார்த்தேன், வெளியில் பால்கனி விளிம்பில் பிடித்து அவன் தொங்கிக்கொண்டு இருந்தான். உடனே வீட்டுக்குள்ளே போய் சுத்தியல் எடுத்து வந்து அவன் கைகளில் போட்டேன் ஒரு போடு, கைகளை விட்டு கீழே விழுந்தான், ஆனால் அவன் பற்றைகளில் போய் விழுந்த படியால், தப்பி விட்டான், எனக்கு பொறுக்க முடியவில்லை, உள்ளே இருந்த ப்ரிட்ஜை தள்ளிக்கொண்டு பால்கனிக்கு வெளியே தள்ளி அவனுக்கு மேல் போட்டு விட்டேன். அதோடு அவனும் மண்டையை போட்டு விட்டான், இந்தத் தள்ளு முள்ளில் நானும் ஹார்ட் அட்டாக்கில் செத்து போய் விட்டேன்'
'ம்ம் இது ஒரு மோசமான சாவு தான், நீ சொர்க்கத்துக்கு போகலாம்'.
அடுத்தவனிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது.
இரண்டாமவன் சொன்னான் 'ச்சே, எவ்வளவு மோசமான நாள் அது. நான் 26 ஆவது மாடியிலுள்ள என் வீட்டின் பால்கனியில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தேன், திடீரென்று என் கால் சறுக்கி பால்கனிக்கு வெளியே விழுந்து விட்டேன், அதிர்ஷ்டவசமாக கீழே அடுத்த மாடி பால்கனியைப் பிடித்து விட்டேன், ஆனால் திடீர் என்று ஒரு மனிதன் ஓடி வந்து சுத்தியலால் என் கையில் அடித்து கீழே தள்ளி விட்டான். அப்படி விழுந்தும், நான் பற்றைகளில் விழுந்த படியால் அடி படாமல் தப்பினேன், ஆனால் அந்த மனிதன் விடவில்லை, மேலிருந்து ப்ரிட்ஜை என்மேல் போட்டு என்னை இங்கே அனுப்பி விட்டான்'
'உன் சாவு ரொம்ப மோசமாக இருக்கு, அதனால் உனக்குச் சொர்க்கம்'
மூன்றாவது ஆள் வந்தான், 'சரி நீ சொல்லு, நீ இறந்த நாள் எப்பிடி இருந்தது?'
'நான் உடைகள் இல்லாமல் ஒரு ப்ரிட்ஜுக்குள் ஒளிந்து இருந்தேன் ....'

'அடப் பாவி, அவனா நீ?.. '

Wednesday, June 16, 2010

உங்களுக்கு ஒரு லோகோ

ஒரு படம் ஓராயிரம் வார்த்தைகளுக்குச் சமமானது என்பது ஒரு பேருண்மை. எங்கள் மூளைக்கும், கருத்துக்களை விட உருவங்களை சேமிப்பதிலும் அவற்றை கையாள்வதிலும் மிகுந்த ஆற்றல் உண்டு என்பது விஞ்ஞான உண்மை ஆகும். இதை எமது வாழ்க்கை முறையிலேயே நாம் அனுபவத்தில் உணர முடியும். எமது மனதில் பதிய வைப்பதற்காகவே நிறுவனங்களில் குறியீடுகள் கவர்ச்சிகரமான, மனதில் பதியக் கூடிய உருவங்களாக உருவாக்கப்படுகின்றன. எந்த ஒரு பிரபலமான நிறுவனத்தையும் நீங்கள் மனதில் உருவகித்தால், அவற்றின் குறியீட்டு உருவமே உங்கள் மனதில் முன்னிற்கும்.




ஓவியம் என்பது உலக மொழி என்பதால், எந்த ஒரு நாட்டைச் சேர்ந்தவரும், எந்த மொழியைச் சேர்ந்தவரும், ஒரு படத்தின் கருத்தை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். உண்மையில், ஆதி மனிதனின் மொழியின் வரி வடிவமாக இருந்தது உருவப் படங்களேயாகும்.


Monday, June 14, 2010

மாயத் தோற்றங்கள் (கவனம்)

(இந்தப் படத்தில் அனிமேஷன் இல்லை)

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்று நம் முன்னோர்கள் சொல்லி விட்டுப் போனாலும் அதை நம்மவர்கள் கணக்கெடுப்பதில்லை. ( அதற்காக வீடியோவில் பார்த்தது பொய் என்று சொல்ல வரவில்லை) கண்ணால் நாம் காணும் காட்சிகளில் சில உண்மை அற்றவை, மூளையில் மாயத் தோற்றமாக உருவாக்கப் படுபவை என்பதைக் காட்டவே இந்தப் பதிவு.

கீழே சில மாயத் தோற்றங்களும் அவற்றின் விளக்கங்களும் உள்ளன. பார்த்து உறுதி
செய்து கொள்ளுங்கள். (படத்தின் மீது அழுத்தினால் பெரிதாகப் பார்க்கலாம்)

இதிலுள்ள இரண்டு ஆரஞ்சு வட்டங்களும் ஒரே அளவிலானவை.


Tuesday, June 8, 2010

ஆப்பிள் ஐபோன் 4


ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 4 இனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஐபோன், நிறைய மாற்றங்களோடு புதிய வசதிகளோடு வெளிவந்துள்ளது. குறிப்பாக, எந்த விடயங்களில் முதல் தொகுதி ஐபோன் பின்தங்கி இருந்ததோ, அவற்றை எல்லாம் நிவர்த்தி செய்து கவர்ச்சிகரமாக வெளிவந்துள்ளது. பின்வரும் புதிய அம்சங்கள் ஐபோன் 4 இல் புதிதாக உள்ளடக்கப்பட்டு இருக்கிறது.

முகம் பார்த்து பேசும் வசதி



இருவர் தொலைபேசி மூலம் பேசும் போதே, ஒருவரை ஒருவர் பார்த்து பேசும் வசதி . இந்த போனில் இரண்டு காமராக்கள் உள்ளன, அவை இரண்டையும் மாற்றி மாற்றி உபயோகித்து வீடியோ உரையாடல் செய்ய முடியும். இந்த வசதி தொலைபேசி சேவை வழங்கும் நெட்வொர்க் இலும் தங்கி உள்ளது.


ரெடினா முகப்புத் திரை


இந்த ஐபோன் இல், உள்ள முகப்புத் திரையானது, முந்திய வெளியீடுகளின் முகப்புத் திரையின் துல்லியத்தை விட நான்கு மடங்கு துல்லியமானதாகும். இதனால், திரையில் உள்ள புள்ளிகளின் வேற்றுமையை மனிதக் கண்களால் கண்டுபிடிக்க முடியாது.


பல பயன்பாடுகளை ஒரே நேரத்தில் இயக்குதல்


இதற்கு முந்திய ஐபோன்களில் இருந்த பெரிய குறைபாடு, ஒரே நேரத்தில் ஒரு பயன்பாட்டை மட்டும் இயக்க முடியும் என்பதாகும். இதற்கு ஐபோன் இயங்குதளத்தில் ஒரு அப்டேட் ஐ ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. ஆனால் இந்தப் புதிய ஐபோன் 4 வெளியீட்டில் அந்த வசதி இணைக்கப்பட்டு இலகுவான முறையில் பயன்படுகளிடையே பயணிக்கும் முறைமை உள்ளடக்கப்பட்டு இருக்கிறது.


Friday, May 21, 2010

யோசிப்பவரா நீங்கள் ?

" எல்லோரும் ஒரே மாதிரி யோசிக்கிறார்கள் என்றால், அதில் சிலர் யோசிக்கவே இல்லை"  இப்படி சொல்லியிருக்கிறார் ஜெனரல் ஜார்ஜ் பட்டன்.

யதார்த்தமும் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் சிந்தனை என்பது வேறுபட்டால் தான் வேறு வேறு கருத்துக்கள் கிடைக்கும். அதிலிருந்து சிறந்த கருத்தைப் பெற முடியும். சிலர் தங்கள் கருத்து தான் சிறந்தது, வேறு கருத்துக்கள் கவைக்குதவாதவை என்று தீர்க்கமாகக் கருதுவார்கள்.

அதே நேரம் இன்னொரு கருத்தும் உண்டு. சிறந்தவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி தான் யோசிப்பார்கள் என்று. அந்தக் கருத்தை மனதில் வைத்துத் தானோ என்னவோ, சிலர் தாங்கள் நினைப்பது போல தான் எல்லோரும் நினைக்க வேண்டும் என்று ஒரு பாசிச மன நிலையுடன் இருப்பார்கள். தாங்கள் நினைப்பது சரியா தவறா என்பதைப் பற்றிக் கூட யோசிப்பதில்லை அவர்கள். இப்படியானவர்களை எங்கள் வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் காணக் கூடியதாய் இருக்கிறது. 

இந்த பாசிச சிந்தனை எங்கே தோன்றுகிறது என்று பார்த்தால், ஒரு மனிதனின் முதல் சமுதாயப் படியான குடும்பத்தில் துவங்குகிறது. ஒரு விடயத்தில் முடிவெடுப்பதற்கு தந்தையும் தாயும் ஆரோக்கியமான கருத்தாடல் செய்து சிறந்த முடிவை எடுக்கும் சந்தர்ப்பத்திற்கான நிகழ்தகவு எமது சமுதாயத்தில் எந்த அளவில் உள்ளது என்பது உங்களுக்கே தெரியும். அங்கே அந்தக் குடும்பத்தின் அடுத்த தலைமுறை கற்றுக்கொள்வது தமது பெற்றோர்களின் உதாரணத்தில் இருந்து தான். 


நாம் வேலைத்தளங்களில் எதிர்நோக்கும் பாசிசம் அடுத்த வகையினது. தொழில் நிறுவனங்கள் தமது உத்தியோகபூர்வ சட்டநகல் ஒன்றை வைத்திருப்பார்கள். அது எப்படி இருக்கும் என்றால், நீங்கள் என்ன தான் பிடுங்கினாலும், அந்த நிறுவனத்தை உங்களால் என்னவும் செய்ய முடியாது, நிறுவன உரிமையாளர்கள் சொன்னால் சொன்னது தான் என்ற மாதிரியும், தங்கள் விரும்பினால் உங்களுக்கு ஏதும் போட்டுத் தரலாம் என்ற மாதிரியும் ஒரு கோப்பை உருவாக்கி, சில சட்ட வல்லுனர்களை வைத்து விளங்க முடியாத வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து உருவாக்கி இருப்பார்கள். நீங்கள் அந்த சட்ட நகலைப் பற்றி கேள்வி கேட்க முடியாதபடி அந்தச் சட்டத்திலேயே சட்டம் இருக்கும்



Related Posts with Thumbnails